visitors

Tuesday, April 13, 2010

புரட்சி நாத்தீகன்!

நண்பர் ஒருவர் சொன்னது இது!

கருப்பு டி ஷர்ட்டில் வந்த அந்த இளவட்டத்தைப்பார்த்து (சுமார் இருபது இருபத்தி இரண்டு வயதிருக்கும்) நண்பர் கேட்கிறார்: தம்பி யாரோட படங்க அது உங்க சட்டையில?

- இவர தெரியாதா ???

- பார்த்திருக்கிறேன், ஆனா ஞாபகம் வரவில்லை!

- இவருதான் சார் சே-குவேரா!

- யாராவது ஆங்கில பாப் பாடகரா??

- என்ன சார் இப்படி சொல்லுறீங்க, இவருதான் சார் பெரிய புரட்சியாளர்!

- ஹோ ஹோ, அப்படியா! நம்ம ஊரு ஆளு மாதிரி தெரியலையே, ஒரு வேளை இங்கே வந்து செட்டில் ஆன ஒருத்தரா? தொலைக்காட்சியில பார்த்ததாகவும் ஞாபகம் இல்லை! ஒரு வேளை ஏதாவது மத சம்பந்தமான மனிதரா, அதுவும் பெரிய தாடி மீசை எல்லாம் வச்சிருக்காரு.....

கடுப்பான இளைஞர் "சார், இவரு பெரிய சோசலிச வாதி, புரட்சியாளர், உலகத்தில் பலருக்கு இவரு "inspiration"................

-ஆ, இப்போ ஞாபகம் வருது தம்பி.... இந்த கியூபா நாட்டில் ...இவரு கூட கம்யூனிச புரட்சி எல்லாம் செய்து, அதான் இப்போ அந்த வயதானவர் .......

- சார் நீங்க சொல்லுறது பிடேல் காஸ்ட்ரோ, அவரு கியூபா தேசத்து புரட்சியாளர்.............

- எல்லாம் ஒரே மாதிரி இருக்காங்க தம்பி, அத விடுங்க, அவரு என்ன புரட்சி செய்து மக்களுக்கு என்ன நன்மை செய்தாரு.... ஏன் கேட்கிறேன் என்றால், இந்த கியூபா நாடு அகல பாதாளத்துல இருக்காம், புரட்சி புரட்சி என்று சொல்லி ஒரு ஆளே பல காலம் ஆண்டுகிட்டிருக்காராம்... யாரும் கேட்கவே முடியாதாம். அதான் ஒருவேள அந்த மாதிரி புரட்சி ஏதாவது சே-குவேரா அவர்கள் செய்தாரான்னு புரிஞ்சிக்கதான்!!

மறுபடியும் கடுப்பான இளைஞர் "இதோ பாருங்க சார், உங்களுக்கு இதெல்லாம் புரியாது, மக்கள் பட்டினியிலும் பசியிலையும் சாவுற பொழுது அதை தடுத்து நிறுத்தத்தான் புரட்சி மற்றும் சே-குவேரா போன்ற மா வீரர்கள் வேண்டும்.....

மேலும் பல வார்த்தைகள் வந்து விழுந்தன அந்த இந்த இளைஞரின் வாயிலிருந்து! அதோடு நிற்காமல் கோபமாக ஏதோ சொல்ல எத்தனித்து, தன்னை சுற்றிய உலகம் எவ்வளவு மோசம் பார், இதற்க்கு மருந்து கண்டுபிடித்தாகிவிட்டது என்று சொல்ல ஆசைப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகள் வராமல் தவித்தான்!

இதை பார்த்த நண்பர் தம்பி வரலாறு படித்திருக்கிறீர்களா என்றார்?

அதற்க்கு அந்த இளம் புரட்சியாளர் சொன்னார், வரலாறு படிக்க தேவை இல்லை, நாங்கள் அதை அமைக்க வந்திருக்கிறோம்!!

- எப்படி சொல்லுங்களேன்?

- அது போகப்போக தெரியும்..

- போக போகதான் தெரிந்து கொண்டுமே, கம்யூனிச நாடுகளுக்கு நேர்ந்த கதியை!
இப்படி சொன்னவுடன், நண்பர் தன்னை கிண்டல் அடிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட இளைஞர்..

- சார் சும்மா குழப்பாதீங்க, சே-குவேரா பத்திதான் பேச்சு, அவரு செய்த மக்கள் தொண்டு யாராவது செய்தார்கள???

- பல பேரு செய்தாங்க தம்பி, இதோ நம்ம ஊருல, காந்தி, அன்னை தெரேசா, பாபாஆம்தே போன்ற பலர்....அவர்கள்

-சார், சும்மா காந்தி பெயர சொல்லாதீங்க, அநியாயத்திற்கு எதிரா, பசி பட்ட்னிக்கு எதிரா, ஏகாதிபத்தியத்திற்கு எதிரா இவரு என்ன செய்தாரு!

- சரி தம்பி, ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம், உங்க சே போன்ற புரட்சியாளர்கள் என்ன செய்தாங்க??

- அது வந்து, பல நன்மைகளை செய்தாங்க.............நாட்டில புரட்சி செய்தாங்க....

- என்ன நன்மைகள் ??

- அது வந்து...அது வந்து.....ஏகாதிபதியத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.......

- சரி உடுங்க.... அந்த புரட்சியாள என்ன நன்மைகள்???

- அதுவந்து, அமெரிக்க முதாலாளித்துவ அநீதிகள் குறைந்தன.....

- எந்த மாதிரி அநீதிகள்?

- அத்து வந்து.... அமெரிக்க ஏகாதிபத்தியம் மக்களின் நிலங்களை பிடிங்கிக்கொண்ட ராணுவ கும்பல்களை கைக்கூலியாக்கி, ஏழை மக்களை அடிமை படுத்தியது!

- அடிமையா??எந்த நாட்டில?

- வரலாறு படியுங்க சார், அதெல்லாம் புரியும்.........எங்களுக்கு நடக்கும் அநியாங்களை தட்டிக்கேட்ட ஒருவரை முன்மாதிரியாய் வைத்து எண்களின் உணர்ச்சிகளை சொல்ல வேண்டும்......சே-குவேரா அதற்க்கு ஒரு நல்ல Icon! அவ்வளவுதான்!!!

- சரி, நல்லது. ஆனால் பாருங்க தம்பி, நீங்க வரலாறு படிக்கலை என்று சொன்னீங்க, அப்புறம் என்னை வரலாறு படி என்று சொன்னீங்க. அதையும் விடுங்க! Icon ஆக மட்டும் ஒருவரை நீங்கள் வைத்து அவரு மக்களுக்கு உண்மையாக ஒன்றுமே செய்யவில்லை என்று தெரியவந்தால் என்ன செய்வீங்க?

- அது எப்படி சொல்லுறீங்க, அதான் வரலாறு சொல்லுதே, அவரு செய்த புரட்சிகளைப்பற்றி! அவர் ஒரு உதாரண புரட்சியாளர் என்று உலகமே ஏற்றுக்கொண்ட பின்னர், நீங்கள் சொல்வது எம்மாத்திரம்!

- உலகமே ஏற்றுக்கொண்டது என்றால் என்ன அர்த்தம் தம்பி? நீங்கள் சொன்னவரைப்பற்றி, அவர் செய்த அடாவடிகளைப்பற்றி, அவர் செய்த உபயோகம் இலா வேலைகளைப்பற்றி , அதன் மூலம் நாசமான பலரைப்பற்றி மிக விரைவாய் பலரால் எழுதப்படிருக்கே??? மேலும் உலகம் என்பது எல்லோரையும் சேர்த்துதானே! நீங்க சொல்லுராமாதிரி இருந்தால், சே வை ஏன் "எல்லோரும்" ஏற்றுக்கொள்ளவில்லை?? அவரை தூக்கி வைத்து ஆடுவது சிறு கூட்டம்தானே!

அதற்க்கு அந்த இளைஞர் - "சார், நீங்க தெரிஞ்சுதானே என்னிடம் விளையாடறீங்க? எதுக்கு சார் இந்த கேள்விகளெல்லாம்??

ஒண்ணும் இல்லை தம்பி. உங்க அப்பாவை நேற்று பார்த்தேன், உங்களுக்கு மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை என்று வருத்தப்பட்டார்! அதற்க்கு நான், இதற்க்கு எல்லாம் ஏன் கவலை படுகிறீர்கள், சாமி நம்பிக்கை இல்லை என்றால் ஒன்றும் குற்றம் இல்லை, பையன் ஒழுக்கமாக இருந்தால் அது போதும் என்றேன்! அதற்க்கு உன் தந்தை, எனக்கும் புரியுது இருந்தாலும் நாங்க தீவிர சைவ பாரம்பரியம் உள்ளவங்க, அதுல இந்த மாதிரி என்பையன் ஆகிவிட்டானே என்றுதான் வருத்தம் என்றார்! அதற்க்கு நானும், சரி நான் உங்கள் மகனுடன் பேசுகிறேன் என்றேன்,அதான் உன்னிடும் கொஞ்சம் பரிமாற்றங்கள்!

-சார், அதுக்கு என்னிடம் நேரடியாகவே வாதிட்டு, என் கருத்துகளை அறிந்து, என் நிலை சரியா என்று புரிந்து கொண்டிறுக்கலாமே?

- அதைதான் தம்பி நான் இப்போழுதுசெய்தேன், என்ன, வேறு மாதிரி செய்தேன். நன்றாக தெளிவடைந்தேன்!

- என்ன சார், என் திடமான நம்பிக்கையினால், நான் என்றும் கடவுள், மதம் போன்றவற்றில் இறங்க மாட்டேன் என்று உங்களுக்கு புரிந்ததா?

- நல்லா புரிந்தது தம்பி. நேரத்திற்கு ரொம்ப நன்றி

- சற்று பெருமிதத்துடன் கூறினான் "அப்போ எங்க அப்பாவிடம் எப்போ வந்து பேசப்போறீங்க. வேற ஒண்ணும் இல்லை, அவரு நீங்க சொல்லுவதை கேட்டு மேலும் வருத்தப்படாருன்னா, நானும் சில பாய்ன்ட்களை அவருக்கு சொல்லுவேன்!"

- அதுக்கு அவசியமே இல்லை தம்பி, உங்க அப்பா நிம்மதி மட்டுமே அடைவாறு, ஏன்னென்றால் நீங்கள் இன்னும் சில நாட்களில் ஒரு சிறந்த மதப்பற்றாளர், மற்றும் கடவுள் நம்பிக்கையாளராக ஆகப்போவது உறுதி என்பதைத்தானே அவரிடம் கூறப்போகிறேன்!

புரியாமல் முழித்த அவனிடம், "உங்க அப்பா, அம்மா மற்றும் குடும்பம் சைவம், நான் வைணவம், அதே மாதிரிதான் நீங்க மார்க்ஸ்யம். உங்க அப்பாவுக்கு சிவ பெருமான் மற்றும் நாயன்மார்கள், எனக்கு விஷ்ணு மற்றும் ஆழ்வார்கள், உங்களுக்கு மார்க்ஸ் மற்றும் ஸ்டாலின் , மாவோ, சே குவேரா போன்றவர்கள்!" நாங்களும் கண்ணை மூடி பலதை நம்புறோம், எங்களுக்கு அவைகள் தெய்வீகம் என்று படுவதால், நீங்களும் அதேமாதிரி கண்ணைமூடி பலதை நம்புகிறீர்கள்! அப்படி இருக்கும் பொழுது, ஹிந்து மதம் அல்லது (மற்ற கம்யூனிச மதம் அல்லாது) மற்ற மதங்களை மற்றும் அதன் கடவுளார்களை நீங்கள் இப்போதைக்கு நம்பாவிட்டாலும், அதை போல செய்யகூடிய அடித்தளம் உங்களுக்குள் இருப்பதால், எப்போ வேண்டுமானாலும் நீங்கள் மதம் மாறலாம்"என்று சொல்லி நகர்கிறார்!


***---***

இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், சே-குவேரா, ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ போன்றவர்களை வழிகாட்டிகளாக பாவித்து அவர்கள்தான் எல்லாம் என்று நம்புபவர்கள், அவர்கள் செய்த கொடுமைகளை புரட்சி என்று பெயரிட்டு துதி பாடுபவர்கள், தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ள தகுதி அற்றவர்கள் என்பதை பலர் இன்னும் புரிந்து கொள்ளாததால்தான்!